Saturday, December 17, 2022

மகாகவி பாரதியார்

 



பாரதியார் பிறப்பு

மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும், 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி , திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் மகனாக பிறந்தார். அவருக்கு தம் பெற்றோரோர் இட்ட பெயர் சுப்பிரமணி.

பாரதியார் இளமை பருவம்

5 வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிதையால் கர்ஜிக்க தொடங்கினார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றில் இருந்து இவர் பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்றானது.
திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் 9 ஆம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞ்சுகளோடும், பண்டிதர்களோடும் சொற் போரில் சுதந்திரமாக ஈடுபட்டார். அதனால் அவரின் தமிழ் புலமை மேலும் அதிகரித்தது. அன்றைய திருநெல்வேலி சீமையில் வசித்த பலர் இவரின் புலமையை கண்டு வியக்க துவங்கினர்.

பாரதியார் திருமண வாழ்க்கை

1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி பாரதி தம் வாழ்நாளில் மறக்க முடியாத தேதியாக மாறியது. 14 வயது மட்டுமே நிறைவடைந்த அவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு நடந்தேறியது பாலியல் திருமணம். இது போன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று அவர் அப்போது எண்ணினார் என்னவோ தெரியவில்லை. பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணத்திற்கு எதிராக பொங்கி எழுந்தார் மகாகவி பாரதியார்.

பாரதியார் கற்ற மொழிகள்

16 வயதில் தன் தந்தையையும் இழந்த பாரதியார் அதன் பிறகு வறுமையில் வடித் தவித்தார். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு காசிக்கு சென்று அலகாபாத் பல்கலை கழகத்தில் சம்ஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்த. இது தவிர ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார் பாரதியார்.
இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான், “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தெளிவாக சொன்னார் மகா கவி பாரதியார்.

பாரதியார் செய்த பணி

4 ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பினார் பாரதியார். பிறகு எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞ்சராக பணியாற்றினார். அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதல் முதலில் 1903 ஆண்டு அச்சில் வந்தது. அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார் பாரதியார். பிறகு சுதேயசிய மித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

இந்திய விடுதைலை போராட்டத்தில் பாரதியார் ஆற்றிய பணி

தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905 ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார் மகாகவி பாரதியார். அதன் பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிக்கா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை தம் ஞயான குருவாக ஏற்றுக்கொண்டார்
1907 ஆம் ஆண்டில் “இந்தியா” என்னும் வார ஏட்டையும் “பால பாரதம்” என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பாரதியார். இந்தியா விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபட துவங்கினார். தாம் ஆசிரியராக இருந்த இந்தியா என்னும் பத்திரிகையை விடுதலைக்காக பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ள செய்தது.

கத்தியின்றி ரத்தமின்றி 
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும்யாரும் சேருவீர் 

என்று நெருப்பு கனலாய் கொந்தளித்தார் மகாகவி பாரதியார்.

பாரதியாருக்கு கைது வாரென்ட்

பாரதியாரின் சுதந்திர எழுச்சி மிக்க பாடல்களும் கேலி சித்திரங்களும் சுதந்திர போராட்டத்திற்கு கை கொடுத்து வழி நடத்தியது. இதனால் “இந்தியா” பத்திரிகை மீது பிரிட்டிஷ் அரசின் பார்வை விழுந்தது. மேலும் பாரதியாருக்கு கைது வாரென்ட் பிறப்பித்ததாக தகவல் வந்தது. அதனால் தன் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்தார் பாரதியார். 1908 ஆம் ஆண்டு முதல் “இந்தியா” பத்திரிக்கை புதுவையில் இருந்து வெளி வர துவங்கியது.
தன் பேணா எழுத்துக்கள் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார் பாரதியார். அவரது பத்திரிக்கை பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பத்திரிகையின் செல்வாக்கும் படிப் படியாக அதிகரித்தது. இதனை கவனித்த பிரிட்டிஷ் அரசு, அந்த பத்திரிகையை படிக்க தடை விதித்தது. இதனால் சென்னையில் பிறந்து புதுவையில் வளர்ந்த “இந்தியா” பத்திரிகையும் பாதை அறியாது பாதியில் நின்றது.

புதுவையில் பாரதியாரின் கவிதை
பத்திரிக்கை முடங்கியதே தவிர பாரதியாரின் புலமை முடங்கவில்லை. அந்த காலகட்டத்தில் தான், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் போன்ற அமர கவிதைகள் பலவற்றை இயற்றினார் பாரதியார். அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார் பாரதியார்.

பாரதியார் கைது

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளி ஏறி பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் கைது செய்யப்பட்டார் பாரதியார். 34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார் பாரதியார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையம் என்னும் ஊரில் குடியேறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளையும் கடயத்திலேயே செலவிட்டார்.

வறுமையில் பாரதியார்

கடையதில் இருந்த காலகட்டத்தில் பாரதியாரை வறுமை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தம் நிலையை விளக்கி சீட்டு கவிதை ஒன்றை எட்டயபுர மன்னருக்கு அனுப்பினார் பாரதியார். அனால் மன்னரிடமிருந்தும் எதிர் பார்த்த உதவி கிடைக்கவில்லை. உலகில் எல்லா உயிரினங்களும் பசியில்லாமல் வாழவேண்டும் என்ற எண்ணம் பாரதியாரிடம் அந்த வறுமை காலத்திலும் மேலோங்கி இருந்தது. வீட்டில் தன் மனைவி சமைக்க வைத்திருக்கும் சிறிதளவு அரிசியை கூட காக்கைக்கும் குருவிகளுக்கு வாரி இறைத்து விட்டு, தான் பசியோடு வாழ்ந்த நாட்கள் ஏறலாம். இத்தகையை உணர்வுள்ள ஒருவரால் தான், “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கவி பாட முடியும்.
வறுமையில் கூட தன்மானத்தோடு தான் வாழ்ந்தார் அந்த புரட்சி தமிழன். பொதுவாக கொடுக்கிற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும். ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் நம் தேசிய கவி. ஒருமுறை தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவர், தட்டில் பணத்தையும் பட்டாடையையும் வைத்து பாரதியாரிடம் கொடுத்தாராம். ஆனால் பாரதியோ, தட்டை உம்மிடமே வைத்துக்கொள் என்று கூறி , தமது கைகளால் அந்த தட்டில் இருந்ததை எடுத்துக்கொண்டாராம். தன்னுடைய கை எதற்காகவும் தாழ்ந்துவிட கூடாது என்பதில் கவனமாய் இருந்துள்ளார் பாரதியார்.

காந்தி, பாரதியார் சந்திப்பு

வறுமையில் சில காலம் வாழ்ந்த பாரதியார், 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகா கவி பாரதியார் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

பாரதியார் இறப்பு

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதியார். அங்கு யாரும் எதிர்பாரா விதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எரிந்தது. அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அதோடு அவருக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அதனால் அவர் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டபோதும் வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப் பட்டார். மருந்துகளை சாப்பிட மறுத்த அவர் தனது 39 வது வயதில், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இவுலக வாழ்வை நீத்தார்.

இளம் வயதில் இத்தகைய பெரும் கவி இறந்தது ஒரு சோகம் என்றால், அதை விட பெரும் சோகம் ஒன்றை “கவிராஜன் கதை” என்னும் நூலில் கவி பேரரசு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மிகச் சிலரே என்பதை குறிப்பிடுகையில்,

“இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை
இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே,
மகாகவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ!
அவன் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட
ஆட்கள் இல்லையே!” என்று குறிப்புபிட்டுள்ளார்.

தான் இறந்தாலும் தன் கனவுகள் அனைத்தையும் நம்மிடமே விட்டு சென்றார் அந்த தீர்க்க தரிசி. “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிய பாராதியை தீர்க்க தரிசி என்று தானே நாம் கூற வேண்டும்.

பாரதியார் எழுதிய நூல்களில் சில
பாஞ்சாலி சபதம், பாரதி அறுபத்தாறு, தேசிய கீதங்கள், விநாயகர் நான்மணிமாலை, கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, தோத்திரப்பாடல்கள், ஞானப்பாடல்கள், புதிய ஆத்திச்சூடி, பதஞ்சலியோக சூத்திரம், சந்திரிகையின் கதை, ,விடுதலைப் பாடல்கள், சின்னஞ்சிறு கிளியே, பொன்வால் நரி, பாரதியார் பகவத் கீதை, ஞானரதம், நவதந்திரக் கதைகள், ஆறில் ஒரு பங்கு.

பாரதியார் நினைவுச்சின்னங்கள் :
பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தில், அவருக்கு மணிமண்டபமும், திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. எட்டயபுரத்திலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த வீட்டினை, பாரதியார் நினைவு இல்லமாக மாற்றி அதை இன்றுவரை தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. அதோடு அங்கு பொதுமக்களும் சென்று பார்வையிடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மகாகவி பாரதியார்

  பாரதியார் பிறப்பு மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும்,  1882  ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி , திருநெல்வ...